தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளை பயங்கரவாதிகள் என கூற வேண்டாம் எனவும் அப்படி பேசியதை தான் கண்டிப்பதாக ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன், சிங்கள எழுத்தாளருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தின் மின்சர என்ற இடத்தில் த ஏசியன் ரிவியூ என்ற சிங்கள அமைப்பு, தீபச்செல்வன் எழுதிய பதுங்கு குழியில் பிறந்த குழந்தை என்ற கவிதை நூலின் சிங்கள மொழியாக்கப் புத்தகம் குறித்து உரையாடல் நிகழ்வொன்றை நேற்று (27.01.2027) முன்னெடுத்திருந்தது.
இந்நிலையில் சிங்கள எழுத்தாளர்களான பிரியங்கர நிவுனுஹெல்ல, மஞ்சுள வெடிவர்த்தன, சந்திரெசி சுதுசிங்க, போதினி சமரதுங்க ஆகியோர் தீபச்செல்வனின் சிங்கள கவிதை நூல் குறித்து விமர்சன உரைகளை ஆற்றியிருந்தனர்.
இதன்போது சிங்கள எழுத்தாளர் பிரியங்கர நிவுனுஹெல்ல தனது உரையில் விடுதலைப் புலிப் பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனைதொடர்ந்து நிகழ்வின் இறுதியில் ஏற்புரையாற்றிப் பேசிய தீபச்செல்வன், அவ்வாறு பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார்.
நானோ, இந்தக் கவிதைகளினுடைய குரலோ, தமிழர்களோ பரிதாபத்தை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மாறாக நியாயமான நீதியையும் நியாயமான அணுகுமுறையையும் சமத்துவமான பாரபட்சமற்ற ஒரு அணுகுமுறையையுமே இந்தக் கவிதைகள் எதிர்பார்க்கின்றன.
அதைச் செய்வதுதான் சிங்கள சமூதாயத்தின் சிங்கள இலக்கிய கர்த்தாக்களினுடைய மனசாட்சியின் பதிலாக இருக்கும்.
இங்கு பேசிய அன்புக்கும் மதிப்பிற்குமுரிய பிரியங்கர நிவுனுஹெல்ல விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாதிகள் என்று பேசியபோது நான் மிகவும் வருத்தமடைந்தேன். அதனை நான் மறுக்கிறேன். கண்டிக்கிறேன்.
ஏனென்றால் என்னுடைய வீட்டில் எனது அண்ணா ஒரு விடுதலைப் புலிப் போராளி, எனது அண்ணா விடுதலைப் போராட்டத்தில் களச்சாவடைந்தமைக்கு அவருக்கு சமர்ப்பணமாகவே இந்த கவிதை நூலை எழுதினேன் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments